புதன், 20 ஜூன், 2012

அணு உலை என்ன? அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் தயாரிப்போம்..: ஈரான் அதிரடி. அதிர்ச்சியில் அமரிக்கா.

 
 டெஹ்ரான்: ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக குற்றம்சாட்டி அந்நாட்டின் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடையை விதித்திருக்கும் நிலையில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலையும் அந்நாடு தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் அணு ஆயுதத்தால் அலறிப் போய் இருக்கும் இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கும் என்ற நிலை இருந்தது. இஸ்ரேலின் கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காதான் தடுத்து பொருளாதாரத் தடை விதித்தது. பின்னர் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது ஈரான் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஈரானிடம் தற்போது 23 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இவற்றுடன் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை சேர்ப்பதற்காக அணுசக்தி என்ஜினை உருவாக்க உள்ளனர்.

இதுதொடர்பாக கடற்படை தளபதி அப்பாஸ் சாமினி கூறும்போது, ஈரான் அணுசக்தியை ஆக்கபூர்வ பணிக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். மின் உற்பத்தி, விவசாயம், மருந்து தயாரிப்பு போன்றவற்றுக்கு மட்டும் அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் என்ஜினை தயாரிக்க உள்ளோம். இது அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். 18 ஆயிரம் 750 டன் எடை கொண்ட கப்பலை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும். என்றார்.

ஈரானின் இந்த முயற்சியால் அமெரிக்கா கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறது இஸ்ரேலோ சீற்றத்தின் உச்சத்தில் இருக்கிறது.