செவ்வாய், 25 செப்டம்பர், 2012

கூடங்குளத்தில் கதிர் வீச்சு ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? : உச்ச நீதிமன்றம் கேள்வி



                            கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாடம் அளிப்பீர்கள் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கூடங்குளம் அணு உலை செயல்படுவதற்குத் தடை விதிக்கமுடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று வியாழக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடங்குளம் அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருந்து கதிர்வீச்சு ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? 1984-ம் ஆண்டு போபாலில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது.  அதன் பாதிப்பு தற்போதும் உள்ளது. அதுபோன்று விபத்து ஏற்பட்டால் அதை அரசு எப்படி எதிர்கொள்ளும்? என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரனிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

மக்களின் உரிமையையும், அவர்களின் விருப்பத்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது என கூறிய நீதிபதிகள்  சுற்றுச் சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர்.

இதேவேளை இப்பிரச்சினையில் மனுதாரர் சுந்தர்ராஜன் தரப்பில் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார். அவர் வாதிடுகையில்

அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் 17 பரிந்துரைகளில் 11 பரிந்துரைகள் மீறப்பட்டுள்ளன. அதுதவிர சுற்றுச்சூழல் விளைவு குறித்த ஆய்வு, பேரிடர் மேலாண்மை ஆய்வு உள்ளிட்ட அடிப்படை விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. அணு சக்தி ஒழுங்காற்று வாரியத்தின் பாதுகாப்பு பரிந்துரைகள் முழுவதுமாக அமல்படுத்த 6 மாதங்கள் தொடக்கி இரு வருடங்கள் வரை கால அவகாசம் தேவை என  அணு மின் நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். துரதிஷ்டவசமாக குறித்த காலப்பகுதியிக்குள் ஏதாவது ஒரு இயற்கை பேரழிவு நிகழ்ந்துவிட்டால், மாபெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டு, சுற்றியிருக்கும் ஒரு மிகப்பெரும் பகுதி அழிவுக்குள்ளாகும். மில்லியன் கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேற்றவேண்டிய நிலை உருவாகும்.

  ரஷியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி, பயன்படுத்தப்பட்ட எரிபொருள் ரஷியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும். ஆனால்,தற்போது 7 வருடங்களுக்கு இந்தியாவிலேயெ  வைத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த எரிபொருளில் இருந்து மரண அபாயம் விளைவிக்கக் கூடிய கதிர்வீச்சு சில ஆண்டுகளுக்கு வெளியாகும் என்ற நிலை காணப்படுகிறது.

இவ்விடயத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்ற போதும், அவற்றின் கருத்தை கூட மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றார். இதையடுத்து இவ்விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, உத்தரவு பிறப்பிக்க முடியும் என்ற கூறிய நீதிபதிகள் அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

முன்னதாக, கடந்த 13-ம் தேதி வழக்கு விசாரணையின் போது அணு உலையில் எரிபொருளை நிரப்புவதற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.