புதன், 25 ஜூலை, 2012

தமிழகத்திலும் மாணவனை சிறுநீர் குடிக்க செய்த விவகாரம்



                         பெரம்பலூர் மாவட்டம் அகரம்சிகூரில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவன் பரத் ராஜை, ஆசிரியர்கள் சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அங்குள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரிலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அகரம்சிகூரில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவன் பரத்ராஜ். விடுதியில் தங்கியிருந்த போது மாணவன் சிறுநீர்கழிக்க அனுமதி கேட்டதாகவும் அனுமதி வழங்க மறுத்த ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து மாணவனை பிரம்பால் அடித்திருக்கிறார்கள். மேலும் உனக்கு மட்டும் எப்படி அடிக்கடி சிறுநீர் வரும் என்று கேலியும் பேசியிருக்கிறார்கள். பின்னர் உச்சகட்டமாக மாணவனின் சிறுநீரை மாணவனையே பிடிக்க சொல்லி அதை குடிக்கவும் சொல்லியிருக்கிறார்கள்.

பயத்தில் ஆசிரியர் சொல்லியதை அப்படியே செய்ய எண்ணி தான் சிறுநீரைக் குடித்து விட்டதாக சிறுவன் பரத்ராஜ் சொல்லியிருக்கிறான். ஆசிரியர்கள் பிரம்பால் அடித்ததில் காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறான் பரத்ராஜ். மேலும் சிறுவனை சிறுநீர் குடிக்க செய்த ஆசிரியர்கள் மூன்று பெரும் இடைக்காலப் பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அம்மாணவன் ஏற்கனவே புகையிலை பாவிக்கும் பழக்கம் உடையவன் எனவும், பல தடவை அதற்காக கண்டிக்கப்படிருந்தான் எனவும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல சென்றவாரம் மேற்கு வங்கத்தில் விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுமியை விடுதி காப்பாளர் சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது.

-4tamilmedia