சனி, 26 ஜனவரி, 2013

சன் நியூஸ் தொலைக்காட்சியில் விவாத மேடை - ஒரு விமர்சனம்

 
பயங்கரவாதத்துக்கு நிறம் உண்டா?







சன் தொலைக்காட்சி செய்தி அலைவரிசையில் நேற்று இரவு 9மணி முதல் 10 மணி வரை விறு விப்பான விவாத மேடை அரங்கேறியது. அரசியல் விமர்சகர் திரு.வீரபாண்டியன் ஒருங்கிணைத்தார்.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி,தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் திரு.பீட்டர் அல்போன்ஸ், ஆர்.எஸ்.எஸ்.சார்பில் திரு.நம்பி நாராய ணன் ஆகியோர் விவாத மேடையில் பங்கேற்றனர்.
பி.ஜே.பி.யின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் திரு.எச்.ராஜா காணொளிக் காட்சி மூலம் இடை இடையே வந்து வந்து பேசினார்.
ராஜஸ்தான் மாநிலம்,ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்த கருத்தினை மய்யமாகக் கொண்ட கருத்துப்போர், களை கட்டியது. ஆர்.எஸ்.எஸ்.முகாம்களில் இந்துத்துவ தீவிரவாதப் பயிற்சி அளிப்பது பற்றிய சர்ச்சையை மய்யப்படுத் தியது விவாதம்.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எடுத்து வைத்தவை:
சுஷில்குமார் ஷிண்டே உள்துறை அமைச்சர் என்ற முறையில் ஒரு தகவலினை முன்வைத்துள்ளார். அதற்கு ஆதாரம் உண்டு என்பதற்கான மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைகள் - குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.ஈடுபட்டுள்ளது என்றும்,ஈடுபட்டவர்களின் 10 பேர் பட்டியல் கை வசம் உள்ளது என்றும் பட்டாங்கமாய் போட்டு உடைத்து விட்டார்.
இதற்கு பதில் என்ன? என்ற திராவிடர் கழகத் தலை வரின் வினாவிற்குத் தக்க பதில் அளிக்கப்படவில்லை.
மாறாக பட்டுக்கோட்டைக்கு வழி எங்கே என்றால், கொட்டைப் பாக்கு தூக்கு ஆறணா என்ற பழைய பழமொழி போல பதில் அளித்தார் திரு.நம்பி நாராயணன்.
காங்கிரசில் உலக மயம் பொருளாதாரத்தைக் கொண்டு வந்து விலைவாசி உயர்வு ஏற்பட்டுவிட்டது. இதனைத் திசை திருப்பும் பகையில்,வரப்போகும் தேர்தலை மனதிற்கொண்டு அபாண்டமாக இந்தப் பழியை காங்கிரஸ் போடுகிறது என்றார்.
உண்மையைச் சொல்லப்போனால் எடுத்துக் கொண்ட பிரச்சினைக்குச் சம்பந்தம் இல்லாமல் இவர்தான் திசை திருப்பும் வேலையில் இறங்கினார். (பொருளாதாரக் கொள்கையில் பிஜேபி (என்.டி.ஏ.) ஆட்சியும் உலகமயத்தைத்தான் பின்பற்றியது).
எழுப்பப்பட்ட கேள்விக்கோ விவாத மேடையின் மய்யப் புள்ளிக்கோ சம்பந்தமில்லாத சொற்கள் அவை.
தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் திரு பீட்டர் அல்போன்ஸ் ஒரு கருத்தினை எடுத்து வைத்தார்.ஒவ்வொரு தேர்தல் நடக்கும்போதும் இதுபோன்ற சிந்தனை மேடையை காங்கிரஸ் நடத்தும். ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் சம்பந்தப் பட்ட அமைச்சர்கள் அவரவர் துறைகளில் உள்ள பிரச்சினைகளை எடுத்துக் கூறுவார்கள்.
உள்துறை அமைச்சர் என்ற முறையில் கூறிய கருத்துத்தான் - தகவல்தான் சுசில்குமார் ஷிண்டே கூறியதாகும்.
இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ்.மீது கூறப்படும் இந்தக் கருத்து இப்பொழுதுள்ள உள்துறை அமைச்சர் ஷிண்டே அவர்கள்தான் முதன்முதலாகக் கூறுவதாகக் கருத முடியாது.இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் அவர்களே இந்து மகா சபை ஆர்.எஸ்.எஸ். மீது இத்தகைய குற்றச்சாற்றை வைத்துள்ளார்.
ஷிண்டேக்கு முன் உள்துறை அமைச்சராக இருந்த திரு.ப.சிதம்பரம் அவர்களும் கூட இதே குற்றச்சாற்றை முன்வைத்துள்ளார்களே என்று கூறி விட்டு, ஒரு முக்கிய குற்றச்சாற்றை ஆர்.எஸ்.எஸ்.,பா.ஜ.க. மீது வைத்தார்.
பல்வேறு இனங்கள்,மொழிகள், மதங்கள் கொண்ட ஒரு நாடு இந்தியா. இதில் குறிப்பிட்ட மதத்தை தனிமைப்படுத்தி -வகுப்புவாதத்தை முன்னிலைப்படுத்தி சமூக நல்லிணக்கத்தைச் சீரழிக்க முயலுவது ஆர்.எஸ்.எஸ்.;அதன்பயிற்சி முகாம்களில் வன்முறைப் பயிற்சிகள் நடைபெறுவதும் நாடறிந்த ஒன்றாகும்.
நாட்டில் நடைபெற்ற பல்வேறு வன்முறை நிகழ்வு களுக்கு ஆர்.எஸ்.எஸ். காரணம் என்பதை உள்துறை செயலாளரே ஆதாரம் இருக்கிறது என்று சொன்ன பிறகு - ஆர்.எஸ்.எஸ்.நண்பர்கள் இதில் வாதிட என்ன இருக்கிறது என்றார்.
காணொளிக் காட்சி மூலம் வந்த எச்.ராஜா - உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் ஆர்.எஸ். எஸிக்குக் கொடுத்த நற்சான்றினைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். (ஆர்.எஸ்.எஸ்ஸில் வகுப்புவாதம் பற்றி படேல் சொன்னதற்கான ஆதாரம் என்னிடம் உண்டு என்று திரு.பீட்டர் அல்போன்ஸ் சொன்னதற்கான பதில் இதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்).
திராவிடர் கழகத் தலைவர் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் எடுத்து வைத்த உள்துறை செயலாளர் கூற்றுக்கு நேரிடையாக பதில் சொல்ல இந்துத்துவாவாதிகளால் சொல்ல முடியவில்லை.
அரசியல் நோக்கத்தோடு சொல்லப்படும் குற்றச்சாற்று என்று அவர்கள் சொல்லுவதில் அர்த்தம் கிடையாது, உள்துறை செயலாளர் என்பவர் அரசு உயர்நிலை அலுவலர். அவர் மீது அரசியல் சாயம் பூதுவது அநாகரிகமே! பி.ஜே.பி. ஆட்சிப் பொறுப்பில் இருந்ததில்லையா?
அப்பொழுது அரசு அதிகாரிகள் சொன்ன தெல்லாம் கூட அரசியல் உள்நோக்கம் கொண்டவை தானா? தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் யாரையும் பலிகொடுக்கத் தயங்காதவர்கள் இந்த இந்துத்துவாவாதிகள் என்பது விளங்கிவிட்டது.
(பி.ஜே.பி. ஆட்சியின்போது 80ஆயிரம் ஆர்.எஸ். எஸ்.காரர்கள் நிருவாகப் பதவிகளில்(நுஒநஉரவஎந ஞடிளவள) நியமனம் செய்யப்பட்டனர்.இராணுவத்தின் முக்கிய பதவிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நியமிக் கப்பட்டனர் என்று விமானப் படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகாவத் போட்டுடைத்தாரா இல்லையா?
பி.ஜே.பி. தேசிய செயற்குழுக் கூட்டத்தில் உயர் நிலை இராணுவத் தளபதிகளை, அதிகாரிகளை அழைத்ததும் நினைவிருக்கட்டும்)
பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.என்பவை வகுப்புவாதம் கொண்டவை. சிறுபான்மை மக்களுக்கு எதிரானவை.இவற்றின் அடிப்படைக் கொள்கையே அதுதான் என்று குற்றச்சாற்றைப் பதிவு செய்தார் திராவிடர் கழகத் தலைவர். அவற்றிற்கு ஆதாரமாக ஆர்.எஸ். எஸின் குரு நாதரான கோல்வால்கரின் க்ஷரஉ டிக கூடிரபாவள (தமிழில்: சத்திய கங்கை) என்பதிலிருந்து எடுத்துக் கூறினார்.
வன்முறைதான் நேர்முகமானது. சாத்மீகம் என்பது எதிர்மறையானது என்று கூறப்பட்டுள்ளதே.
கிறித்தவர்கள்,கிருஷ்ணனைக் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும்;முஸ்லிம்கள் ராமனை வழிபட வேண்டும் என்று கோல்வாக்கர் எழுதியுள்ள தற்கு என்ன பதில் என்ற கழகத் தலைவரின் வினாக்களுக்கு விடை இல்லை.
பந்தை அடிக்க முடியாவிட்டால் காலை அடிப்பது போல எச்.ராஜா வாய்ச்சாங்குள்ளி அடித்தார்.
இலண்டனில் இருந்து வெள்ளைக்காரர்கள் தமிழ்நாட்டை நேரிடையாக ஆள வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்கள் இவர்கள் என்று சம்பந்தம் இல்லாமல் அரட்டை அடித்தார் எச்.ராஜா.
விவாத மேடையின் நோக்கத்தை வேறு இடத்திற் குக் கொண்டு போக முயற்சிக்க வேண்டாம் என்று சொன்ன தமிழர் தலைவர் அவர்கள்,
ஆர்.எஸ்.எஸ்.சுதந்திரத்துக்காக பாடுபட்ட அமைப்பா? என்று எதிர்கேள்வியை வைத்தார். அது பற்றி எல்லாம் பேச ஆரம்பித்தால் பிரச்சினையை விட்டு வேறு எங்கோ போனதாகிவிடும் என்று மிகப் பொறுப்பாகப் பதிலடி கொடுத்தார்.
1932 டிசம்பரில் வெளியிடப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களும், சுயமரியாதை இயக்க சமதர்மக் கட்சியின் வேலைத் திட்டம் என்பதில் முதல் திட்டம் என்ன தெரியுமா?
பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தியாவைப் பூரண விடுதலை செய்வது என்பதாகும்.காங்கிரஸ் முழு சுதந்திரம் கேட்டது கூட இந்தக் கால கட்டத்திற்குப் பிறகுதான்.1942 ஆகஸ்டு வெள்ளையனே வெளி யேறு இயக்கத்திலிருந்து விலகிக் காங்கிரசை விட்டே விலகி ஓடியவர் தான் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் என்ற வரலாறு எல்லாம் தெரியாதா?
இந்தியாவின் முதல் இந்தியர் நீதிபதி என்று பார்ப்பனர் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்களே -அந்த முத்துசாமி அய்யர் சென்னைப் பட்டதாரி களுக்கு என்ன அறிவுரை கூறினார்?
நமது மாட்சிமைமிக்க அரசுக்கும், பிரிட்டானிய நாட்டுக்கும் ஆழ்ந்த விசுவாசம் காட்டும் வகையில் உங்கள் எண்ணமும் செயலும் அமையட்டும். ஏக காலத்தில் போதிய அளவில் திரும்பச் செலுத்த முடியாத வகையில் நாம் அவர்களுக்குக் கடமைப் பட்டு இருக்கிறோம். ஆரிய இனத்தில் இரு பிரிவு களும் கடவுளின் விதிப்படி இந்தியாவில் ஒன்று சேர்ந் திருக்கின்றன. அதனுடைய பெருங்கடமையை இந்தியாவிற்கு ஆற்ற பிரிட்டானிய ஆட்சிக்கு திறமை இருக்கிறது
- என்று பேசியவர்தானே ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர். (தேவையில்லாமல் வாயைக் கொடுத்துப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம்).
- வளரும்
-- கலி.பூங்குன்றன்-