செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

நேர்மை அரசியல்வாதி விருது பெற்றார் டாக்டர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ



நம் நாட்டில் மிகவும் பற்றாக்குறையும் தட்டுப்பாடும் மிக்கதாக இருப்பது நேர்மை. இன்னவர் நேர்மையானவர் என்று யாருக்கும் சான்றளிக்க இயலவில்லை. யாரையும் நேர்மையாளர் என்று யாரும் நம்பத் தயாரில்லை என்பதாக சூழ்நிலை இருக்கிறது. இந்த நேர்மைப் பஞ்சத்தைப் போக்குவதற்காக வேண்டி சமூகதளத்தில் பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அமைப்புகளாகவும் உருவாகி இருக்கிறார்கள். ஆன்மீக, சித்தாந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்ட காரணத்தால் மக்கள் பேராசைப் பிடித்து லஞ்சம் பெறவும், ஊழல் செய்யவும் துணிந்துவிட்டனர். ஆனால் மக்கள் மத்தியில் ஆன்மீகம் பெருக்கெடுத்து ஓடுவதுபோல் தோன்றுகிறது. இது, வெறும் வழிபாட்டு ஆன்மீகம். அதாவது, பத்து பைசாவுக்கு செலவில்லாத அல்லது அதிகபட்சம் பத்து ரூபாய்க்குள் செலவு கொண்ட ஆன்மீகம். ஆனால் மக்கள் வாழ்வியலில் ஆன்மீகம் வறண்டுவிட்டது. அதனால் நேர்மை நழுவிவிட்டது.

இந்த நழுவிய நேர்மையை மீட்டெடுக்கும் முயற்சியாக 1) ஊழல் ஒழிப்பு இயக்கம் 2) ஐந்தாவது தூண் 3) லஞ்சம் கொடாதோர் இயக்கம் 4) தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் 5) உந்துனர் அறக்கட்டளை 6) மக்கள் சக்தி இயக்கம் ஆகிய ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, நேர்மையாக நடப்பவர்களைப் பாராட்டி கௌரவிப்பது என்று முடிவெடுத்தன. அரசியல்வாதிகளில் யாராவது நேர்மையாக இருப்பதாகச் சொன்னால் அது நம்பவே முடியாத செய்தி. அதனால்தான் அரசியலில் நேர்மையாக இருப்பவர்களை முதலில் கௌரவிப்பது என்று முடிவெடுத்தன.

அதன்படி, 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சில கேள்விகள் உள்ளடங்கிய படிவத்தை அனுப்பிவைத்து, அதனை நிரப்பி அனுப்ப வேண்டி கேட்டுக்கொண்டனர். அதில் 24 கேள்விகள் இடம்பெற்றன. அவ்வாறு அனுப்பப்பட்ட படிவத்தை மொத்தமே நான்கு பேர்தான் நிரப்பி அனுப்பி இருந்தனர். அவர்கள்:
1) பேராசிரியர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
2) இரா. அண்ணாதுரை (மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
3) ஜெ. புஷ்பலீலா ஆல்பன் (பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
4) க. பாண்டியராஜன் (விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)

இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்து ‘திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது’ என்ற பெயரில் விருதுகள் வழங்கி கௌரவித்தனர். இதற்கான நிகழ்ச்சி 11.08.2012 அன்று சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரி கேரளங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் வெ. பொன்னுலிங்கம் (வயது 90) தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், ‘பாராளுமன்ற ஜனநாயக முறையே ஊழலுக்கு காரணம். பிரதமர் மற்றும் முதல்வர்களை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை வரவேண்டும், என்றார்.

வாழ்த்துரை வழங்க இலக்கிய செல்வர் குமரி அனந்தன், பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு) வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் மற்றும் மாலன் ஆகியோர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு இடையே நோன்பு துறப்பதற்கான நேரம் வந்ததையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், வந்திருந்த முஸ்லிம்களுக்கு நோன்பு துறக்க வசதி ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் மஃரிப் தொழுகையை பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையேற்று நடத்தினார்.

குமரி அனந்தன் தனது உரையில், காமராஜர் முதல் அமைச்சராக இருந்தபோது அவர் நேர்மையாக நடந்துகொண்ட சம்பவங்களைச் சொல்லி, விருது பெற்றவர்களைப் பாராட்டினார்.

மாலன் பேசுகையில், சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 60 ஆண்டுகளில் நேர்மையாளன் என்று சொல்லிக் கொள்வதில் நமக்குத் தயக்கம் ஏற்பட்டிருப்பதுதான் சுதந்திரம் நமக்குத் தந்த அனுபவம். லஞ்சம் வாங்குவது சட்டப்பூர்வமாகி இருக்கிறது. மக்களும் இதனை சட்டவிரோதமாகப் பார்ப்பதில்லை. தேசத்தை விற்று தங்களைக் காப்பாற்றத் துணிந்திருக்கிறார்கள்.

நேர்மையாக நடக்க விரும்பாதவர்கள் மத்தியில் நேர்மையாக நடக்க விரும்புபவர்களைப் பாராட்டியாக வேண்டும். இல்லையென்றால் நேர்மையாக நடப்பவர்களுக்கே சலிப்பு வந்துவிடும். அதனால்தான் நேர்மையாக நடந்து கொள்பவர்களை அழைத்துப் பாராட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். முதலில் அரசியலில் இருப்பவர்களைப் பாராட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். இப்படிப்பட்ட முயற்சி எடுத்த எஸ்.எம்.அரசு (ஊழல் எதிர்ப்பு இயக்கம் அமைப்பின் பொதுச் செயலாளர்), அவர்களைப் பாராட்டுவதாகக் கூறினார்.

பி.எஸ்.ராகவன், ஐ.ஏ.எஸ்., (ஓய்வு); சுவாரஸ்யமான தகவல்கள் பல கூறினார். தனது வாழ்நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதாகவும் ஆனால் இந்த நிகழ்ச்சிதான் தன்னை அதிகம் ஆர்வப்படுத்தியதாகவும் கூறினார். அந்தக் காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மக்களுக்காக வேலை செய்வதைத் தொண்டாக கருதினார்கள். ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட சமயத்தில், ஆட்சித் தலைவரான வைஸ்ராயை யாரும் பார்த்துவிட முடியாது. ஆனால் அவருக்கு சாதாரண ஒரு குடிமகன் கடிதம் எழுதினாலும் அதற்கு பதில் கடிதம் ஏழு நாட்களில் வரும். அந்த பதில் கடிதத்தில், வைஸ்ராய்கள், I am Viceroy. Sir! your most obedient and servent என்று எழுதினார்கள். சுதந்தித்திற்குப் பிறகு, நேரு அமைச்சரவையில்தான் The Most obedient and Servent என்பதை எடுத்துவிட்டார்கள். மக்களுக்கு பதில் சொல்லக் கடமை அற்றவர்களாக கருதிக் கொண்டார்கள். நம்மை அடிமைப்படுத்தியதாகக் கூறப்படும் ஆங்கிலேயர்கள்கூட ஒவ்வொரு குடிமகனையும் மதித்தார்கள் என்று கூறினார்.

சுதா ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத் தின் வழக்குரைஞர் மற்றும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யு.சி.எல்) தேசியத் துணைத் தலைவர் இங்கே விருது பெறக்கூடிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்வை எனக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமுமுக தொடங்குவதற்கு முன்னதாகவே தெரியும். தமுமுக என்ற ஜனநாயக அமைப்பு உருவாவதற்கு நாங்களும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறோம். கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் சட்டமன்ற உறுப்பினராகி இன்று இந்த விருதைப் பெறுவது எனக்கு மகிழ்ச்சி. நாம் ஏற்கெனவே மாற்றப்பட்டவர்களோடுதான் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார். இங்கு இளைஞர்கள் யாரும் வரவில்லை என்று ஆதங்கப்பட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முன்னாள் நாடா-ளுமன்ற உறுப்பினர் இல்லத் திருமணம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான செலவில் நடந்ததைச் சுட்டிக்காட்டி, நேர்மை விருதுபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களைப் பாராட்டினார்.

விருது பெற்றவர்கள் ஏற்புரை இரா. அண்ணாதுரை எம்.எல்.ஏ
தனது சகோதரி வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததற்காக அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் (நெல்லை மஜீத்) அவர்களை காமராஜர் கடிந்துகொண்டதையும், அந்தக் குழாய் இணைப்பைத் துண்டிக்கச் செய்ததையும் சுட்டிக் காட்டினார்.

திரிபுரா முதலமைச்சர் நிருபன் சக்ரவர்த்தி, பதவியைவிட்டுப் போகும்போது ஒரு பெட்டியில் தனது துணிகளையும், மறு பெட்டியில் புத்தகங்களையும் கொண்ட இரண்டு பெட்டிகளோடு மட்டும் வீட்டுக்குப் போனதையும் நினைவுகூர்ந்தார்.

பேராசிரியர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ
ஊழல், மக்களின் மனசாட்சியாகிவிட்டது. இங்கு பாராட்டுகளைப் பெறுவதற்காக நான் வரவில்லை. ஆனால் அதைவிட முக்கியம் ஊழலை எதிர்க்கக் கூடியவர்களுடன் என்னை அடையாளப்படுத்தி அந்த சிந்தனையை வலுப்படுத்துவதற்காகவே நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.


1995ல் தமுமுக, சிறுபான்மை மக்களின் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவே தொடங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களுக்கும் சாதி, சமயம் பார்க்காமல் பல்வேறு வகையான மக்கள் சேவையில் நாங்கள் ஈடுபட்டோம். முதலில் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில்தான் இருந்தோம். ஆனால் தேர்தல் வரும்போது அரசியல் ரீதியாக குறிப்பிட்ட கூட்டணிக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு எடுத்தோம். தேர்தல் அரசியலிலும் பங்கேற்க வேண்டும் என்று பலர் வற்புறுத்திக் கூறிய பின்னர்தான் அரசியலில் பங்கெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அப்போதும் சிலர், அரசியல் ஒரு சாக்கடை என்று எச்சரிக்கை செய்தார்கள்.

இன்று, அரசியல் ஒரு தொழிலாகிவிட்டது. ஆனால் அது சேவையாக இருக்கவேண்டும். அதற்காகவே, மாற்று அரசியலுக்கான களம் என்று மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்கினோம். எங்கள் கட்சியில் வேட்பாளர் செலவு செய்யக்கூடாது; கட்சிதான் செலவு செய்யவேண்டும் என்பதை அடிப்படைக் கோட்பாடாக வைத்தோம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலிலே மூன்று தொகுதிகளிலே போட்டியிட்டு இரண்டில் வெற்றியும் பெற்றோம். மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்கவில்லை. அப்படிக் காசு கொடுத்து வாங்கும் வாக்குகள் தேவை இல்லை என்று சொல்லிவிட்டேன். நானும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷாவும் இதுவரை ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கவில்லை. இனியும¢வாங்கப் போவதில்லை.
 பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், திட்டங்களுக்கான அரசு நிதி ஒதுக்கீட்டில் இருந்து எனக்கு பங்கு தருவதாகக் கூறினார். நான் மறுத்துவிட்டேன். மேலும் எனது தொகுதிக்கு உட்பட்ட பணிகளில் தரம் குறைவாக இருந்தால் சும்மா விடமாட்டேன் என்றும் கூறினேன். எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தனது ஊருக்கு சாலைப் போட்டுத் தரவேண்டும் என்று ஒரு உள்ளூர் அரசியல்வாதி என்னிடம் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையைப் பரிசீலித்து ஆவண செய்வதாக நான் கூறினேன். இப்படி நான் சொன்ன பிறகு தனியாக என்னிடம் பேசவேண்டும் என்று சொல்லி, இந்த நிதியை ஒதுக்கிவிட்டால் முறைப்படி செய்ய வேண்டியதையெல்லாம் செய்வதாக என்னிடம் சொன்னார். நான், எந்த முறையும் எனக்கு செய்யத் தேவையில்லை; தொகுதி மேம்பாட்டு நிதியை அளிப்பதற்காக எந்தக் கமிஷன் தொகையையும் பெறுவதில்லை என கூறிவிட்டேன். இப்படி நான் சொன்னதும், அதிசயப் பிறவிபோல என்னை அவர் பார்த்தார். இன்னொரு பிரபல அரசியல் பிரமுகர், முதல்முறையாக நீங்கள் தேர்தலில் போட்டியிட்டதனால் உங்களுக்கு பலரும் தேர்தல் செலவுக்காக நன்கொடை கொடுத்திருப்பார்கள். ஆனால் அடுத்த முறை அப்படி செலவு செய்ய முன்வர மாட்டார்கள். எனவே இப்போதே இந்தக் கமிஷன்களைப் பெறுவதுதான் அறிவுடையதானது என்று குறிப்பிட்டார். இவற்றையெல்லாம் என்னிடம் சொல்லத் தேவையில்லை; நான் அரசியலை தொழிலாக நினைத்து வரவில்லை; சேவைதான் எங்கள் நோக்கம் என்று கூறிவிட்டேன்.

அதேபோல் மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து, ‘என் பெயர் சொல்லி யாராவது லஞ்சம் கேட்டால் நான் பொறுப்பல்ல; எனது சார்பாக நான் யாரையும் நியமிக்கவில்லை என்றும் கூறிவிட்டேன்’’ என்றார். மேலும் அவர், ‘‘சுதந்திர இந்தியாவில் யாருடைய ஆட்சி மாதிரி அரசு அமையவேண்டும் என காந்தியடிகளிடம் கேட்டபோது அவர், ‘கலீஃபா உமரின் ஆட்சியைப் போன்று அந்த அரசு அமையவேண்டும்’ என்றார். கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஒருமுறை இங்கும் அங்குமாக பரபரத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள், உமர்(ரலி) அவர்களிடம், ‘ஏன் இங்கும் அங்குமாக அலைகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி) அவர்கள், ‘‘அரசுக்கு ஜகாத்தாக வந்த ஒட்டகங்களில் ஒன்றைக் காணவில்லை. அதற்கு நான்தான் பொறுப்பு. அந்த ஒட்டகம் இறுதிவரை கிடைக்காமல் போனால் நாளை இறைவனின் சந்நிதானத்தில் அதற்கான பதிலை நான்தானே கூறவேண்டும்’ என்றார்கள். அப்படிப்பட்ட நேர்மை அவசியமாகும்.எனவே, நானும் லஞ்சம் வாங்கமாட்டேன், அடுத்தவர்களையும் லஞ்சம் வாங்க விடமாட்டேன். லஞ்சத்தை ஒழிக்கப் பாடுபடுவேன்’’ என்று கூறி முடித்தார்.

கா. பாண்டியராஜன் (தேமுதிக), எம்.எல்.ஏ
‘‘என் தொகுதி மக்கள், இவன் நம்ம ஆளு என்று சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் ஊழல் ஆழமாக வேரூன்றிய மாநிலம். சராசரியாக ஒரு துறைக்கு 350 கோடி ரூபாய் செலவு ஆகிறது. அதில் 10, 15 சதவீதம் லஞ் சமாகப் போய்விடுகிறது. ஆனால் இந்த ஆட்சியில் மாற்றம் தெரியும். கட்சிக்காரங்க பலர் பங்கு கிடைக்கலனு சொல்றாங்க. சில கட்சிகள் நீங்கலாக, இந்த சட்டசபையில் பல உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.
 
அடுத்த நாள் யாரைக் கொண்டு ஜெயிக்கப் போகிறேன் என்ற சந்தேகம் அரசியல்வாதிகள் மனதில் இருக்கிறது. சித்தாந்த கட்சிகள்ல அந்த சிக்கல் இல்லை. ஆனால் பெரிய கட்சிகளில் இருப்பவர்களுக்கு அந்த சிக்கல் இருக்கு. பெரிய கட்சிகள் இரண்டும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காங்க. தமிழகத்தில் மாற்று அரசியல் தேவை இருக்கு. இது ஒரு நல்ல முயற்சி. இங்கு வந்திருந்த நான்கு பேர் தவிர மற்றவர்கள் தவறு செய்பவர்கள் என்று எண்ண வேண்டாம். பலர் நல்லது செய்து கொண்டிருக்கிறார்கள்’’ என்றார். விருது அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஜெ.புஷ்பலீலா ஆல்பன் (திமுக), டெசோ மாநாட்டுப் பணிகள் காரணமாக வரவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் பி.எம்.ஆர்.சம்சுதீன், வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் முனீர்சேட், சமுதாய சேவகர் ஹனீபா, ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

-- ஜி.அத்தேஷ்
படங்கள்: முத்துப்பேட்டை மாலிக்



-.tmmk.info