வியாழன், 15 நவம்பர், 2012

இந்தியாவில் பணம் இருந்தால் எதுவும் செய்யலாம்!



இந்தியாவை ஆளுவது கார்பரேட் நிறுவனங்களே, அவர்கள் நினைத்தால் இந்தியா ஸ்தம்பித்து விடும் என்று எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.
 
“இந்தியாவில் உப்பு முதல் விமானம் வரை தயாரிக்கும் ஏகபோக உரிமை கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்வதை தடுக்க வேண்டும்.
 
கார்பரேட் நிறுவனங்கள் நிறைந்த அமெரிக்காவில் கூட எல்லா துறைகளிலும் இவர்களுக்கு அனுமதியில்லை. இந்தியாவில் உள்ள 19க்கும் மேற்பட்ட பெரும் செய்தி ஊடகங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள்தாம் கட்டுப்படுத்துகின்றன. மக்கள் எந்த செய்தியை அறியவேண்டும் என்பதையும் அவர்கள்தாம் தீர்மானிக்கின்றார்கள்.
 
பணம் இருந்தால் எதுவும் செய்யலாம் என்ற சூழலும், கூட்டுப் படுகொலைக்கு தலைமை தாங்கிய நபர் மாநிலத்தை ஆளும் அபாயகரமான ஜனநாயகம் தான் இந்தியாவில் உள்ளது. கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண எந்த கட்சிக்கும் விருப்பம் இல்லை. இந்தியாவின் முழு ராணுவத்தையும் அனுப்பினாலும் கஷ்மீர் பிரச்சனை தீராது. இதர படையினரை நக்ஸல் வேட்டை என்ற பெயரில் காட்டுக்கு அனுப்பினாலும் பழங்குடியினரின் பிரச்சனைகள் தீராது.
 
40 சதவீத மக்கள் ஊட்டச்சத்துக் குறைவால் அவதியுறும் ஒரு நாட்டை எவ்வாறு சூப்பர் பவர் (வல்லரசு) என்று அழைக்கமுடியும் என்று எனக்கு தெரியவில்லை. மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் ஏழ்மையில் உள்ளனர். அவர்கள் மீது விலைவாசி உயர்வு உள்ளிட்ட போர்ப் பிரகடனம் செய்கிறது அரசு. இவற்றையெல்லாம் பரிசீலிக்காமல் அணுசக்தி நிலையங்களை நிறுவ அரசு முயலுகிறது. அன்றாடம் உருவாகும் கழிவுகளை பாதுகாக்க கட்டமைப்பு இல்லாத தேசத்தில் அணுசக்தி கழிவுகளை என்னச் செய்யப் போகின்றார்கள்?
 
சிந்திக்கவும்: * கார்பரேட் நிறுவன பெருச்சாளிகளான டாடா, பிர்லா, ரிலைன்ஸ், மற்றும் ஊழல் அரசியல்வாதிகள் இவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்து சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ளனர். இந்த கயவர்கள் கையில் நாடு சிக்கித்தவிக்கிறது, மக்கள் விழிப்படைவார்களா?
 
* அன்றாடம் உருவாகும் சாதாரண கழிவுகளையே பாதுகாக்க நாட்டில் கட்டமைப்பு இல்லை என்ற அருந்ததிராயின் கேள்வி உண்மையானது. இது போன்ற மோசமான ஒரு சூழலில் கூடங்குளம் அணு உலை தேவையா? கூடங்குளம் அணு உலையை ஆதரிக்கும் கூட்டம் இதை சிந்திக்குமா?
*மலர் விழி*

சிந்திக்கவும்