திங்கள், 2 ஜூலை, 2012

கொசுக்களுக்கு ஒரு `சுவர்’!


நம் நாட்டைப் பொறுத்தவரை கொசுத் தொல்லையால் அவதிப்படாத அதிர்ஷ்டசாலிகள் குறைவு.

பல்வேறு கொசுத் தடுப்பு முறைகளைப் பயன்படுத்தியும் அவற்றிடம் இருந்து முழுமையாகச் சுதந்திரம் பெற முடியவில்லை. கொசுக்கடிக்கு நிரந்தரத் தீர்வாக ஒன்று வந்துவிட்டது. அது, `லேசர் சுவர்’. இந்தச் சுவர், அதிகச் செலவு வைக்காமலே பெரும் பரப்பளவை கொசுக்களின் தாக்குதலில் இருந்து தற்காக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சபோல்க்ஸ் மார்க்கா அமைப்பினர் இந்த லேசர் சுவரை உருவாக்கியிருக்கின்றனர். இது ஒருவரது வீட்டை கூடாரம் போல மூடியிருக்கும். ஒரு கொசு கூட இந்தக் கவசத்தைத் தாண்டி வீட்டுக்குள் பிரவேசிக்க முடியாது. குடும்பத்தினரின் தூக்கத் தையும் கெடுக்க முடியாது.

நாம் இதுவரை பயன்படுத்தி வரும் எல்லா தடுப்பு முறைகளையும்விட இது சிறப்பானது என்று உறுதியாகக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

கொசுக்களின் உணர்வுறுப்புகளுக்கு வெளிச்சமானது தொந்தரவாக அமையும், குழப்பும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே மார்க்கா கண்டுபிடித்துவிட்டார். தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளின் விளைவாக மார்க்கா தனது மனைவி சுஸா, சக ஆய்வாளர் இம்ரே பரோட்ஸுடன் இணைந்து, ஒளிச் சுவர் எனப்படும் ஒரு லேசர் தடையை உருவாக்கியிருக்கிறார். இதைத்தான் கொசுக்களால் ஊடுருவ முடியாதாம்.

"நாங்கள் யதேச்சையாகத்தான் இதைக் கண்டுபிடித்தோம். நடந்தோ, பறந்தோ வரும் கொசுக்கள் இந்தச் சுவரைத் தாண்டாமல் திரும்பிச் சென்றதைக் கண்டோம்" என்று மார்க்கா கூறுகிறார்.

ரொம்பச் செலவு வைக்காமல் அதிகப் பரப்பளவை கொசுக்களிடம் இருந்து காக்கும் இந்தத் தடுப்பு முறை பலரையும் ஆச்சரியத்துக் குள்ளாகியிருக்கிறது.
தொடர்ந்து பல கோடி ரூபாய் உதவியுடன் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.