புதன், 11 ஜூலை, 2012

அரிசி விலையை ஒரு ரூபாய் ஏற்றினால் கூச்சலிடுவதா? நடுத்தர மக்களை கிண்டலடிக்கிறார் சிதம்பரம்



                  ""பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் செலவழிக்க தயாராக இருக்கும் மத்திய தர வகுப்பினர், அரிசிக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால் கூச்சல் போடுகின்றனர்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:கொள்முதல் விலையை அதிகரித்ததால், லட்சக்கணக்கான விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. நாம் ஒவ்வொரு விஷயத்தையும், மத்திய தர வகுப்பினரை கருத்தில் கொண்டே பார்க்க முடியாது. பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் அல்லது ஐஸ் கிரீமிற்கு 20 ரூபாய் செலவழிக்கத் தயாராக இருக்கும், நம் நாட்டில் உள்ள மத்திய தர வகுப்பினர், அரிசிக்கோ அல்லது கோதுமைக்கோ, கிலோவுக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால், கூச்சல் போடுகின்றனர்.

ஆசிரியர்கள் நியமனம்:
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், 500 வகுப்பறைகள் கட்டியது, புதிதாக 6.8 லட்சம் ஆசிரியர்களை நியமித்தது, ஒவ்வொரு நாளும் 11 கோடி குழந்தைகள் பலன் அடையும் வகையில், மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தியது போன்றவை எல்லாம், மன்மோகன் சிங் அரசின் சாதனைகள். இலவச கட்டாய கல்வியை அமல்படுத்தியது, தேசிய தொழில்நுட்ப நிறுவனம் அமைத்தது போன்றவையும், கல்வித் துறையில் மத்திய அரசு படைத்த சாதனைகள்.
மின் துறையில் கூடுதலாக, 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிதாக எட்டாயிரம் கிராமங்கள் மின்சார வசதி பெற்றுள்ளன. உலகில் தொலை தொடர்பு சந்தையில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

நெருக்கடியால் பாதிப்பு:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், முதல் இரண்டு ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. ஆனால், கடந்த ஆண்டில், எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவதில் சிரமம் ஏற்பட்டது. 2008ல் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து இந்தியா தப்பித்து விட்டாலும், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடியால், தற்போது நமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2008ல் ஏற்பட்ட நெருக்கடியை விட, ஐரோப்பிய மண்டல நெருக்கடி மிக மோசமானதாக உள்ளது. சீனா மற்றும் சில நாடுகளைப் போல, மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. விரைவில் மிக உயர்வான வளர்ச்சிப் பாதையை நோக்கி நம் நாடு செல்லும். பிரச்னைகளில் இருந்து மீளும்.

பிரதமர் நடவடிக்கை:
நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்த, வருவாயை அதிகரிக்கவும், தேவையற்ற செலவு களைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

-dinamalar