புதன், 1 ஆகஸ்ட், 2012

டுபாயில் இஸ்லாமிய வாதிகளுக்கு எதிராக வேட்டை


ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த ஒரு சில தினங்களுக்குள் குறைந்தது 10 இஸ்லாமியவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள தாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் கடந்த ஜூலை 15 ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைது செய்யப்பட்ட அரச அதிருப்தியாளர் களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மறுபுறத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருக்கும் வெளிநாட்டு தொடர்புடைய குழுக்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டுவருவதாக ஐக்கிய அரபு இராச்சிய அரசு அறிவித்துள்ளது.

7 எமிரேட்களைக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்க்கட்சிகளை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரபு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் ஏற்படுவதை தவிர்க்க அரசு போராடி வருகிறது.

இவ்வாறு அரச எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அந்நாடு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் இவ்வாறான 40 பேரளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும் பாலானோர் இஸ்லாமியவாதிகளாவர். குறிப்பாக அல் இஸ்லாஹ் இஸ்லாமிய குழு உறுப்பினர்களே பெரும்பாலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பின் தோற்றுவிப்பாளர்களுள் ஒருவரான ஹமாத் ரொகைத் என்பவர் கடந்த வாரம் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். பாதுகாப்புபடையினர் தமது வீட்டுக்கு வந்து சோதனையிட்டு ரொகைதை கைது செய்ததாகவும் அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் இல்லை என்றும் அவரது உறவினர் ஒருவர் ராய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் இந்த செயற்பாட்டுக்கு ஐ.நா. மனித உரிமை அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

JM NEWS