செவ்வாய், 9 அக்டோபர், 2012

உலகையே வியப்பில் ஆழ்த்திய கூடங்குளம் போராட்டம்!


கூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு இன்று கடலில் முற்றுகையிடும் போராட்டடம் ஒன்றை அறிவித்திருந்தது.

அதன்படி இன்று காலை பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட படகுகளில் மீனவர்கள் வந்து குவிந்தனர். அணு உலைக்கு 500மீட்டர் தொலைவில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி, சின்ன முட்டம், கோவளம், மணக்குடி, ஆரோக்கியபுரம், புதுக்கிராமம், பள்ளம்துறை, அன்னை நகர், கீழமணக்குடி, மேலமணக்குடி, ராஜாக்க மங்கலம்துறை, பொழிக்கரை, பெரியகாடு, கேசவன் புத்தன்துறை, புத்தன் துறை, கொட்டில்பாடு உள்பட 15 கடற்கரை கிராம மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீசாரைத் திரும்பப் பெற வேண்டும், போராட்டம் தொடர்பாக கைது செய்த அனைவரையும் விடுதலை செய்யவேண்டும், அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறவேண்டும், கூடங்குளம் அணுஉலையை மூடவேண்டும் என்ற 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்துவதாக, அணுஉலை எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்

அணு உலையை சுற்றி உள்ள கடல் பகுதியை போலீசார் ரோந்து படகுகள் மூலம் சுற்றி வளைத்துள்ளனர். ரோந்து பணியில் கப்பல் மற்றும் ஹெலிக்காப்படரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சுமார் 5000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்

உலக வரலாறு இதுபோன்ற ஒரு போராட்டத்தை கண்டிருக்காது என்றே சொல்லலாம். உண்ணாவிரத போராட்டம், மணலில் புதைந்து போராட்டம், கடலில் இறங்கி முற்றுகை போராட்டம், படகுகள் மூலம் முற்றுகைப் போராட்டம், என்று இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் காட்டிய போர் குணம், அரசையும், ஆளும்வர்க்கத்தையும் அச்சம் கொள்ள வைத்திருக்கிறது.
 
கூடங்குளம் மக்களின் போராட்டம் வெற்றியடைய நமது வாழ்த்துக்கள்.

- சிந்திக்கவும்