வியாழன், 11 அக்டோபர், 2012

மக்கள் கொந்தளிப்பால் முறியடிக்கப்பட்ட மஸ்ஜித் தகர்ப்பு முயற்சி!



                               டெல்லி வளர்ச்சி ஆணையம் (Delhi Development Authority – DDA) தகர்க்க முனைந்த முனிர்கா மஸ்ஜிதின் ஒரு பகுதி அப்பகுதி மக்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டது.
 
டெல்லியில் முனிர்கா கிராமத்திலுள்ள நெல்சன் மண்டேலா சாலையில் இந்த மஸ்ஜித் உள்ளது. வசந்த் விகார் காவல் நிலையத்திற்கருகிலுள்ள இந்த மஸ்ஜிதின் ஒரு பகுதியைத் தகர்ப்பதற்காக நேற்று காலை 9 மணியளவில் புல்டோசர்களும், டிரக்குகளும் வரவழைக்கப்பட்டன.அவற்றிற்குப் பாதுகாப்பாக போலீசாரும் மஸ்ஜிதுக்கு அருகில் குவிந்தனர்.
இதனைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் சுமார் 500 பேர் மஸ்ஜிதைச் சுற்றி ஒன்றுகூடி விட்டனர். உள்ளூர் எம்.எல்.ஏ. பர்கா ஷுக்லாவும், அந்தப் பகுதி கவுன்சிலர் பிர்மிலா டோகாஸும் அந்த இடத்திற்கு வந்தனர். பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மஸ்ஜிதைத் தகர்ப்பது நிறுத்தப்பட்டது.
டெல்லி வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் மஸ்ஜிதின் ஒரு பகுதி தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகவும், அதனால் அதனை இடிப்பதற்கு தங்களிடம் உத்தரவுகள் இருப்பதாகவும்  கூறினர். ஆனால் இதனை மஸ்ஜித் நிர்வாகிகள் மறுத்தனர். அந்த நிலம் மஸ்ஜிதுக்குச் சொந்தமானது என்பதற்கு அவர்கள் தகுந்த ஆவணங்களை வைத்துள்ளனர்.
இந்த மஸ்ஜித் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருப்பதால் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு சுமார் 3000 பேர் வருகை தருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இடமளிக்கும் விதமாக கொளுத்தும் வெயில் படாமலிருக்க தகரத்தால் ஆன தற்காலிகக் கூரையை மஸ்ஜித் நிர்வாகம் மஸ்ஜிதுக்கு வெளியே அமைத்துள்ளது. கடைசி நேரத்தில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல் நாத் தலையிட்டு மஸ்ஜித் இடிப்பைத் தடுத்தார்.
இனி வருங்காலத்திலும் இம்மாதிரி இடிப்பு முயற்சிகளைச் செய்யாமலிருக்க மஸ்ஜித் நிர்வாகம் டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
 
  நன்றி - Labbaikudikadu News