சனி, 18 ஆகஸ்ட், 2012

கலவரத்தை கண்டித்து நடந்த போராட்டம், கலவரத்தில் முடிந்திருக்கிறது.

 


கலவரத்தை கண்டித்து நடந்த போராட்டம், கலவரத்தில் முடிந்திருக்கிறது. மும்பையில் நேற்று அசாம் கலவரத்தை கண்டித்து நடந்த போராட்டம் ஒன்றில் வன்முறை வெடித்ததால், காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
கலவரத்தாலும், துப்பாக்கிச் சூட்டாலும், 2 பேர் உயிரிழந்தனர். 55 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாகனங்கள் கொளுத்தப்பட்டன. போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பின்னரே கலவரம்
ஓய்த்திருக்கிறது.
அசாமில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்து, ரசா அகாடமி என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டு, மும்பை ஆசாத் மைதானத்தில் நேற்று பிற்பகல் போராட்டம் நடைபெற்றது. இவர்களது போராட்டம், அசாம் கலவரத்தில் தொடர்புடைய இரு தரப்பினரில், ஒரு தரப்பினருக்கு ஆதரவாக நடத்தப்பட்டது.
அதாவது, மியான்மர் அகதிகளாக வந்து அசாமில் குடியேறிய மக்களுக்கு ஆதரவாக இந்த போராட்டத்தை நடத்தினர், ரசா அகடமி அமைப்பினர்.
அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. அப்போது போராட்டக்காரர்களில் சிலர் பாதுகாப்பிற்கு வந்திருந்த காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதோடு, அங்கிருந்த வாகனங்களைத் தீயிட்டும் கொளுத்தினர். அதிலிருந்து துவங்கியது கலவரம்.
அரசு பஸ்கள், வாகனங்கள் மீது சரமாரியாக கல்வீச்சு நடைபெற்றது. தனியார் செய்தி தொலைக்காட்சிகளின் 3 ஒளிபரப்பு வாகனங்கள் கொளுத்தப்பட்டன. அதை தடுக்க முயன்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர். ரிசர்வ் போலீஸ் படை வேனும் எரிக்கப்பட்டது. உதவி போலீஸ் கமிஷனர் கார் அடித்து நொறுக்கப்பட்டது.
சிறிது நேரத்தில் அந்த பகுதி முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தடியடி நடத்திய காவல்துறையினர், பின்னர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். கலவரக்காரர்கள் அப்போதும் கலைந்து செல்லாததால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். எண்ணிக்கை சொல்லப்படாத அளவில் பலர் காயம் அடைந்தனர்.
கலவரத்தின் போது போலீசாரின் துப்பாக்கிகளை வன்முறையாளர்கள் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. அது பற்றி விசாரணை நடக்கிறது.
கலவரத்துக்கு காரணமானவர்கள், வாகனங்களுக்கு தீ வைத்த விஷமிகள் சிலரின் அடையாளம் தெரிந்திருப்பதாகவும், அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து மகாராஷ்ட்ர முதல்வர் ப்ரித்விராஜ் சவான் ஆறுதல் கூறினார். அவர், “போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏன் வன்முறையில் இறங்கினர் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். மும்பை குற்றப்பிரிவு காவல்துறையிடம் இது குறித்த விசாரணை ஒப்படைக்கப்பட்டு அவர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்” என்றார்.
போராட்டத்தை ஏற்பாடு செய்த இஸ்லாமிய அமைப்பான ரசா அகாடமியின் பொதுச்செயலாளர் முகமது சயீத், இந்த வன்முறைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். போராட்டம் நடைபெற்றபோது யாரோ சிலர் திடீரென உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து கிடைக்கும் தகவல்களும், இது நிச்சயமாக ‘வெளி வேலை’ என்பதாகவே உள்ளது. ரசா அகாடமி அமைப்பு வன்முறையில் இறங்கி, துப்பாக்கிகளை பறித்துச் செல்லும் ரகத்திலான அமைப்பு அல்ல.