செவ்வாய், 18 செப்டம்பர், 2012

அடக்கு முறைகளும், கறுப்புச் சட்டங்களும்! அருந்ததிராய்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgF_HUc8zK32GaBySLxwl3U7rBKN6EU-HF5Q7opq5wWJNQ9ZIGELCSbhbgB7V1G7HzIjuGXIxREeTjdjvEHxXTCm8do2cim67b29pfaw1L0PwG6wVrAJ9kdN4RvBz-54zB5dZJRgcFxXUuY/s1600/Untitled-1.jpg

                                          பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது.

இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான 15.09.2012  சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மற்றும் அதனை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் அவர்கள் தனது உரையில் " “3 லட்சத்திற்கும் அதிகமானோர் கறுப்புச் சட்டங்களில் கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்பார்த்து இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் சிறைகள் நிரபராதிகளால் நிரம்பி வழிகின்றன. இவர்களில் பெரும்பாலோர் ஒடுக்கப்பட்ட பழங்குடியினர், தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் ஆவர். வாழ்வதற்காக போராடும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், பழங்குடியின-தலித் மக்களை மாவோயிஸ்டுகளாகவும் சித்தரிக்கின்றார்கள். மக்கள் தொகையில் 13.4 சதவீத எண்ணிக்கையைக் கொண்ட முஸ்லிம்கள் சிறைகளில் 23.4 சதவீதம் உள்ளனர்.

பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் அவர்கள் தனது உரையில் “அடக்கு முறைகளுக்கும், கறுப்புச் சட்டங்களுக்கும் எதிராக முஸ்லிம்களும், புரட்சியாளர்களும் ஒன்றிணைவதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உணவும், உடையும் இல்லாத ஆயிரக்கணக்கான அப்பாவி பழங்குடியின மக்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வது பெருமளவில் அதிகரித்துவிட்டது. அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்க நான் கோரிக்கை விடுக்கிறேன்” என்றார்.