வியாழன், 23 ஆகஸ்ட், 2012

மடிந்து விட்டதா மனிதாபிமானம்: மூதாட்டியை தவிக்க விட்டு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

 
வெயில் தாங்காமல் சுருண்டு விழுந்த மூதாட்டியை மீட்டு செல்ல வந்த, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை அனாதையாக விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுருண்டு விழுந்தார்:

காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதியில், நேற்று பகல் 12 மணிக்கு நடந்து சென்ற மூதாட்டி, வெயில் தாங்க முடியாமல் திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். அதைப் பார்த்த வியாபாரி ஒருவர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. வெயிலில் சுருண்டு கிடந்த மூதாட்டியின், நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், ஆகியவற்றை ஆம்புலன்சில் வந்த ஊழியர்கள் பரிசோதித்தனர். பரிசோதனை முடிவை சென்னை திருவல்லிக்கேணி தலைமை அலுவலகத்தில் உள்ள மருத்துவருக்கு தெரிவித்தனர்.

உத்தரவு:


அவர், ""மூதாட்டியை மருத்துவமனையில் சேர்க்க, யாராவது உடன் வருவதாக இருந்தால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள், இல்லை என்றால் அங்கேயே விட்டுச் செல்லுங்கள்' எனக் கூறியுள்ளார். அதன்படி ஊழியர்கள், அருகில் இருந்தவர்களிடம் ""இவரை மருத்துவமனையில் சேர்க்க யாராவது உடன் வருகிறீர்களா,'' எனக் கேட்டனர். பொதுமக்கள் யாரும் முன் வரவில்லை. உடனே ஊழியர்கள் ஆம்புலன்சை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். இரக்க குணம் படைத்த சிலர், மூதாட்டியை தூக்கி, நிழலில் படுக்க வைத்தனர். பின், தேநீர், பிஸ்கட் வாங்கி கொடுத்து விட்டு சென்றனர். சில நிமிடங்களுக்கு பிறகு, மூதாட்டி சுய நினைவுக்கு வந்தார். வயதான ஒரு பெண்மணியை நிர்கதியாய் விட்டு விட்டு சென்ற, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.