திங்கள், 2 ஜூலை, 2012

கல்லூரிகளில் அதிக விலைபோகும் மருத்துவப் படிப்பு..



                  தமிழகத்தில் மொத்தம் 39 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீடு நீங்கலாக, 1,653 எம்.பி.பி.எஸ்., இடங்கள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்து வப் பல்கலையின் கீழ் இயங்கும் 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 829 இடங்களும், நிகர்நிலைப் பல்கலைகள் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் கீழ்வரும் தனியார் மருத்துவக் கல்லூரி களில் 1,050 இடங்களும் உள்ளன.

'கட்-ஆப்’ மதிப்பெண்கள் அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லூரிகள் அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ்., 'சீட்’ கிடைக்கப் பெற்ற விண்ணப்பதாரர்கள் போக, மீதிப் பேரில், டாக்டர் ஆகியே தீர வேண்டும் என்ற முடிவில் உள்ளோரும், தங்கள் பிள்ளைகளை டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் என ஆசைப்படும் பணக்காரப் பெற்றோரும், தங்கள் ஆசை நிறைவேற, தனியார் மருத்து வக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் 'சீட்’ பெற வேண்டியுள்ளது.

ரூ.30 இலட்சம் முதல் 50 லட்சம்:கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, மாணவர் மற்றும் பெற்றோரின் முன்னுரிமை உள்ளிட்டவை அடிப்படையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள், 'ஏ’, 'பி’, 'சி’, என, பிரிக்கப்படுகின்றன. 'ஏ’ கிரேடு கல்லூரிகளில் 40 லட்சம் ரூபாய் வரையும், 'பி’ கிரேடு கல்லூரிகளில் 35 லட்சம் ரூபாய் வரையும், 'சி’ கிரேடு கல்லூரிகளில் 30 லட்சம் ரூபாய் வரையும், எம்.பி.பி.எஸ்., 'சீட்’ விலைபோவதாக, தனியார் மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எம்.பி.பி.எஸ்., 'சீட்’ கேட்டு தங்களைத் தொடர்பு கொள்வோருக்கு, தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் தொலைபேசியில் எந்த பதிலும் அளிப்பதில்லை. நேரில் அழைத்துப் பேசி, பேரம் படிந்தால், 'சீட்’ தருகின்றனர். தொகை அதிகம் என்பதால், கல்லூரி நிர்வாகம், பெற்றோர் இரு தரப்பினரும், இடைத் தரகர்களை பெரும்பாலும் விரும்புவதில்லை.

பிளஸ் டூவில் அதிக மதிப்பெண் பெறாத இப்படி ரூ.30 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை கொடுத்துப் படிக்கும் வசதிபடைத்த மாணவர்கள் மருத்துவப் படிப்பை ஒரு கெளரவமாக நினைத்துப் படிக்கின்றனர் என்று தான் சொல்லவேண்டும்.. அப்படியே படித்து முடித்தாலும் இவர்கள் என்னவோ அரசு மருத்துவமனை வேலைகளுக்கு செல்லப் போவதில்லை.. மாறாக மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனைகள் அமைத்து தான் படிக்க கல்லூரிக்கு கொடுத்த பணத்திற்கு 10மடங்கு சம்பாதிக்கவே நினைக்கின்றனர்.. பின்னர் எப்படி நம் நாட்டில் மருத்துவ சேவை இலவசமாக கிடைக்கும்?