திங்கள், 2 ஜூலை, 2012

"சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த சாத்தியமில்லை! – மத்திய அரசிடம் பச்செளரி குழு அறிக்கை



                        சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த முடியாது என்று ஆர்.கே.பச்செளரி தலைமையிலான குழு அறிக்கை சமர்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சேது சமுத்திர திட்ட தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இத்திட்டம் தொடர்பாக விளக்க மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது.

அதில் சேது சமுத்திர திட்ட மாற்றுபாதையை நடைமுறைப்படுத்துவது என்பது பொருளாதார ரீதியாகவும், சுற்றுசூழல் ரீதியாகவும் சாத்தியப்படாத ஒன்று என்றும், இதுதொடர்பாக ஆர்.கே.பச்செளரி கமிட்டி அளித்துள்ள அறிக்கை தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


முன்னதாக சேது சமுத்திரத் திட்டமானது இந்துக்களின் புனித ராமர் பாலம் வழியாக செல்கிறது என்றும் ஆகையால் அதை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்புகளும் சுப்பிரமணிய சாமி உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர்.


இதையடுத்து இதுபற்றி ஆராயுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சேது சமுத்திரத் திட்டப் பணிகளை நிறுத்தி வைத்த மத்திய அரசு மாற்றுப் பாதை குறித்து ஆராய நோபல் பரிசு வென்ற சுற்றுச்சூழல் வல்லுனர் ஆர்.கே.பச்செளரி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.


பச்செளரி கமிட்டியின் அறிக்கையை மத்திய அமைச்சரவை இன்னும் ஆராயவில்லை என்பதால், இதன் மீது முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.


இதைத் தொடர்ந்து சேது திட்டம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க 8 வார கால அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.


-thoothu