வியாழன், 28 ஜூன், 2012

முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்கிறார்களாம்; சொல்கிறார் ராமகோபாலன்.

பாகிஸ்தானில் உள்ள இந்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அறிக்கையொன்றை இந்து முன்னணியின் நிறுவனர் ராம.கோபாலன் சமீபத்தில் விடுத்துள்ளார். அதில், ''பாகிஸ்தானில் 65 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மதமாற்றக் கொடூரம் நெஞ்சை பிழிவதாக இருந்து வருகிறது. சில கோடியில் இருந்த இந்துக்கள் எண்ணிக்கை இன்று பல லட்சம் என்ற அளவில் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். அவரது கூற்றே பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் நிகழவில்லை என்பதற்கு சான்றாக உள்ளது. பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். ராமகோபாலன் கூறுவது போன்று 65 ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் அங்கு நடைபெற்று இருந்தால், இன்று அங்கே சில ஆயிரம் இந்துக்கள் கூட மிஞ்சியிருக்க மாட்டார்கள். ஆனால் அவரே பல லட்சம் இந்துக்கள் பாகிஸ்தானில் இருப்பதாக கூறுகிறார். இது முரண்பாடக அவருக்குத் தெரியவில்லையா?
அப்படியானால் பாகிஸ்தானில் கோடிகளாக இருந்த இந்துக்கள், இன்று லட்சங்களாக குறைந்தது ஏன் என்று ராமகோபாலன் கேட்கலாம். கோடிகளில் இருந்தார்கள் என்று பொதுவாக சொல்வதைவிட, அன்று இத்தனை கோடிப்பேர் இருந்தார்கள். இன்றோ இத்தனை லட்சம் பேர் தான் இருக்கிறார்கள் என்று புள்ளிவிவரத்தோடு அவர் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும். மேலும் ஒரு மதத்தவரின் எண்ணிக்கை குறைவுக்கு மதமாற்றம் ஒரு காரணமாக இருந்தாலும் அது மட்டுமே காரணமாக இருப்பதில்லை.
ஒரு காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த இந்து சகோதரர்கள் பத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகளை சாதாரணமாக பெற்று வளர்த்தார்கள். இன்று அதே இந்து சகோதரர்களில் பெரும்பாலோர் ஒன்றுக்கு மேல் பெறுவதில்லை. இதே நிலை நீடித்தால் இந்துக்களின் எண்ணிக்கை வளர்ச்சியடையாது. இந்த அடிப்படையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், தங்களின் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தாத பட்சத்தில் அவர்கள் குறைவாகவே காணப்படுவார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மதத்திலிருந்தும் குறிப்பிட்ட சதவிகித்தினர் விரும்பியே மதம் மாறுகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே சிறுபான்மையாக இருக்கும் இந்துக்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் மதம் மாறினால், இன்னும் எண்ணிக்கையில் குறைவது இயற்கையே.
அதே நேரத்தில் முஸ்லிம்களில் பெரும்பாலோர் குழந்தை விசயத்தில் கணக்குப் பார்ப்பதில்லை. ஏனென்றால் தனக்கும், தான் பெற்றெடுக்கும் பிள்ளைக்கும் படியளிப்பவன் இறைவன் தான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது. இதே ரீதியில் முஸ்லிம்கள் தங்களின் பிறப்பு விகிதத்தை கொண்டு செல்லும்போது, அவர்களில் ஒரு சாரார் மதம் மாறினாலும், முஸ்லிம்களின் சதவிகிதத்தில் மைக்ரோ அளவில் கூட குறைய வாய்ப்பில்லை. இன்னும் தெளிவாக ராமகோபாலனுக்கு புரியும் வகையில் சொல்வதாக இருந்தால் கடலிலிருந்து 4 டி.எம்.சி.தண்ணீர் வெளியேறினால் கடலுக்கு பாதிப்பில்லை. ஆனால் கிணற்றிலிருந்து வெளியேறினால்..? இதுதான் பாகிஸ்தான் நிலை. அப்படியானால் கட்டாய மதமாற்றம் பாகிஸ்தானில் நிகழவே இல்லையா? என்று ஒரு கேள்வி எழலாம். எல்லாநாடுகளிலும் எல்லா மதத்திலும் சில கடும்போக்காளர்கள் இருப்பது போன்று பாகிஸ்தான் முஸ்லிம்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய சில கடும்போக்கு மதவாத சிந்தனை உள்ளவர்கள் அத்திப்பூத்தது போன்று சிலரை மதம் மாற்றியிருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த பாகிஸ்தான் முஸ்லிம்களே கட்டாய மதமாற்றத்தில் ஈடுபதுவது போன்ற கருத்தை ராமகோபாலன் விதைக்க முற்படுவது ஆரோக்யமானதல்ல.
இன்னும் சொல்வதானால் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் ராமகோபாலன் நினைப்பது போன்று தீவிர இஸ்லாமிய வெறியர்கள் அல்ல. இந்தியாவில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது, பாகிஸ்தானில் சிலரால் சில கோயில்கள் இடிக்கப்பட்டன. அவைகள் அந்த ஆண்டே பாகிஸ்தான் அரசால் திரும்பிக் கட்டித்தரப்பட்டன. ராமகோபாலன் நினைப்பது போன்று அவர்கள் இஸ்லாமிய வெறியர்களாக இருந்திருந்தால், முதலில் பள்ளிவாசலை இடித்த இந்தியா கட்டித்தரட்டும் என்று இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு இருக்கவில்லை. இன்றும் அங்குள்ள இந்துக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதாக ராமகோபாலன் பாராட்டும் எந்த பத்திரிக்கையும் சொல்லவில்லை. ஏன் ராமகோபலனே சொல்லவில்லை. பாகிஸ்தானில் மதவெறி ஆட்டம் போடுவதாக ராமகோபாலன் கருதுவதால் இங்கே இந்த தகவலை பதிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
அடுத்து ''இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமில்லை என்பார்கள். ஆனால் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டு மனித உயிர்களைக் கொன்று குவிப்பவன் கையில் குரானைத் தான் தூக்கிபிடிக்கிறான். அதனை முஸ்லீம் அரசியல்வாதிகளோ, முஸ்லீம் மதகுருக்களோ கண்டிப்பதில்லை, அவனுக்கு எதிராக ஃபத்வா வழங்குவதில்லை. ஆனால் முஸ்லீம் அல்லாதவர்கள் தவறுதலாகச் செய்துவிட்டால் மதவெறியைத் தூண்டி கலவரத்தை உருவாக்கி வந்துள்ளார்கள். ஏன் இந்த இரட்டை வேடம்'' என்று கேட்கிறார் ராமகோபாலன்.
பயங்கரவாத செயலில் ஈடுபடுபவன் குர்ஆனை தூக்கிப் பிடித்து விட்டால், அவன் செயலை இஸ்லாம் அங்கீகரிக்கிறது என்று அர்த்தமா? சாமான்யர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட இந்துச் சாமியார்கள் அணியும் காவி உடையணிந்து பயங்கரவாதத்தில் ஈடுபட்ட பிரக்யா சிங் உள்ளிட்ட பலர் செய்த பயங்கரவாதங்களை இந்து மதம் அங்கீகாரம் பெற்ற செயலாக ஏற்றுக் கொள்வாரா ராமகோபாலன்? பயங்கரவாத செயலை செய்த ஒரு இந்துத்துவா, பகவத் கீதையை கையில் வைத்திருந்தால், அவனது பயங்கரவாதம், இந்து மதத்தில் உள்ளதுதான் என்று சொல்ல ராமகோபாலன் தயாரா? எந்த உயிரையும் அநியாயமாக கொல்லச் சொல்லும் ஒரு வசனத்தை குர்'ஆனிலிருந்து காட்டுவாரா ராமகோபாலன்? ''பயங்கரவாத செயலில் ஈடுபட்டவனை முஸ்லிம் மதகுருக்களும், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கண்டிக்கவில்லையாம். கதைவிடுகிறார் ராமகோபாலன். எந்த பயங்கரவாதியை எந்த முஸ்லிம் மதகுரு தோளில் தட்டிக்கொடுத்து பாராட்டினார்கள்? இன்னும் சொல்லப்போனால் பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் உணர்ச்சி வசப்பட்டு பழிவாங்க நினைத்தால் கூட அவனை பொறுமையை கொண்டு உபதேசம் செய்து பக்குவப்படுத்தும் வேலையைத் தான் முஸ்லிம் மதகுருக்கள் செய்கிறார்கள். இதற்கு உதாரணமாக பாபர் மஸ்ஜித் தகர்ப்பைக் கூறலாம். பாபர் மஸ்ஜிதை ராமகோபாலன் வகையறாக்கள் தகர்த்தபோது, முஸ்லிம்களை முஸ்லிம் மதகுருக்களும், தலைவர்களும் அமைதிப்படுத்தியிருக்காவிட்டால் அத்வானி வகையாறக்கள் செய்ததை அப்துல்லாக்களும் செய்திருப்பார்கள். எனவே எந்த முஸ்லிம் மதகுருவும், எந்த முஸ்லிம் தலைவரும் வன்முறையை விரும்புவதில்லை. அதை ஊக்கப்படுத்துவதுமில்லை. அவ்வாறு ஊக்கப்படுத்தினால் அவர் முஸ்லிம் மதகுருவாக இருக்கமாட்டார் என்பதை ராமகோபாலன் விளங்கிக் கொள்ளட்டும்.
அடுத்து, ''இஸ்லாத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை என்று குரானிலிருந்து மேற்கொள்காட்டும் முஸ்லீம் அரசியல்கட்சித் தலைவர்கள், 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தென்காசி, இராமநாதபுரம் பகுதிகளில் ஆசை வார்த்தை காட்டி, அச்சுறுத்தி ஒரு லட்சம் பேரை மதமாற்ற முயன்றபோது கண்டிக்கவில்லை. அதற்குத் தலைமை தாங்கியவர்களின் வாரிசுகள் தான் இன்றைய முஸ்லீம் அரசியல்வாதிகள். அந்தச் சூதாட்டத்தை இந்து முன்னணி ஆன்மீக, தேசிய பெரியோர்களின் ஒத்துழைப்பால் தடுத்து நிறுத்தியது. முஸ்லீம்களின் ஆசைக்கு பலியானவர்கள் இன்றும் துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். இன்று இவர்கள் வடிப்பது முதலைக் கண்ணீர் என்பதை மக்கள் உணர்வார்கள்'' என்றும் கூறியுள்ளார் ராமகோபாலன்.
தமிழகத்தில் முஸ்லிம்கள், 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தென்காசி, இராமநாதபுரம் பகுதிகளில் ஆசை வார்த்தை காட்டி, அச்சுறுத்தி ஒரு லட்சம் பேரை மதமாற்ற முயன்றதாக ஒரு முழுப்பொய்யை உதிர்க்கிறார் ராமகோபாலன். இவர் சுட்டிக்காட்டுவது போல் முஸ்லிம்கள் எதைச் சொல்லி ஆசை வார்த்தை காட்டினார்கள்? உங்கள் பிள்ளைகளை இலவசமாக படிக்க வைக்கிறோம் என்று ஆசை காட்டினார்கள் என்று சொல்லப் போகிறாரா? அப்படி சொன்னால அது பொய்யாகிவிடும். ஏனென்றால் முஸ்லிம்களே பத்து வரைக்கும் கூட படிக்க முடியாமல் பாஸ்போர்ட்டு எடுக்கையில், எப்படி மற்றவர்களுக்கு இந்த ஆசை காட்டமுடியும்? பணம் காசு தருகிறோம் என்றோ, வேலை வாய்ப்புகள் தருகிறோம் என்றோ ஆசை காட்டினார்கள் என்று ராமகோபாலன் சொன்னால் அதுவும் பொய்யாகிவிடும். ஏனென்றால் இந்தியாவில் தலித் சமுதாயத்தை விட பின்தங்கிய ஒரு சமூகமாக முஸ்லிம் சமுதாயம் உள்ளதாக நீதியரசர் ராஜேந்திர சச்சார் போன்றவர்களே சொல்லியிருக்கும்போது, முஸ்லிம்கள் எப்படி மற்றவர்களுக்கு ஆசை காட்டி மதமாற்றம் செய்யமுடியும்? மத மாற்றம் செய்வதற்காக முஸ்லிம்களுக்கு வேறு வெளிநாடுகள் பண உதவிகளை செய்கின்றன. அதைக் கொண்டு மதமாற்றம் செய்கிறார்கள் என்று ராமகோபாலன் சொல்லமுடியுமா? வெளிநாடுகளில் இருந்து ராமகோபாலன் வகையறாக்களுக்கு வரும் பொருளாதார உதவிகளையும், முஸ்லிம் நல அமைப்புகளுக்கு வரும் பொருளாதார உதவிகளையும் விசாரணைக்கு உட்படுத்த ராமகோபாலன் தயாரா? இதாவது பரவாயில்லை. முஸ்லிம்கள் அச்சுறுத்தி மதமாற்ற முயற்சித்தார்கள் என்று ராமகோபாலன் கூறி தானும் நகைச்சுவையில் வடிவேலுவை மிஞ்சமுடியும் என்று காட்டுகிறார். ராமகோபாலன் கூறும் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் எந்த முஸ்லிம் மன்னர் ஆட்சியில் இருந்தார்? மக்களாட்சி தானே நடந்தது. அதுவும் ராமகோபாலன் வகையறாக்களுக்கு ஆதரவு மனப்பான்மையுடைய ஒருவர் தானே தமிழக முதல்வராக இருந்தார்? அப்படியிருக்க முஸ்லிம்கள் எப்படி ஒரு லட்சம் பேரை அச்சுறுத்த முடியும்? ஆட்சியாளர்கள் எங்கே போனார்கள்? நாம் ராமகோபாலனுக்கு சவாலாகவே சொல்கிறோம். அவர் கூறும் அந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் ஆசை வார்த்தை கட்டினார்களா? அல்லது தாமாக முன் வந்து மதம் மாறியவர்களை, மாற முயன்றவர்களை மீண்டும் தாய் மதத்திற்கு இழுக்க அரசாங்கம் ஆசை வார்த்தை காட்டியதா? முஸ்லிம்கள் அச்சுறுத்தினார்களா? அல்லது விரும்பி மதம் மாறியவர்களை அரசு அச்சுறுத்தியதா? கலந்துரையாட ராமகோபாலன் தயாரா?
மேலும், ''முஸ்லீம் மதத்தில் கட்டாய மதமாற்றத்தை ஏற்கவில்லை என்பவர்கள் முன்பு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தபோது ஏன் எதிர்த்தார்கள். இஸ்லாத்தில் இருப்பதை வரவேற்கத்தானே செய்யவேண்டும்'' என்று அறிவுப்பூர்வமாக[!] கேட்கிறார் ராமகோபாலன். இஸ்லாத்தில் கட்டாய மதமாற்றம் இல்லை என்பது எள்ளளவும் எள்ளின் முனையளவும் சந்தேகமில்லா உண்மை. முஸ்லிம்களில் எவருக்கும் எவரையும் கட்டாய மதமாற்றம் செய்வதில் விருப்பமில்லை என்பதும் உண்மை. அப்படியிருக்க, கட்டாய மதமாற்ற சட்டத்தை ஏன் எதிர்த்தார்கள் என்று பார்ப்பதற்கு முன்னால், இன்னொன்றையும் ராமகோபாலன் விளங்கிக் கொள்ளவேண்டும். அதாவது கட்டாய மதமாற்ற சட்டத்தை முஸ்லிம்கள் மட்டுமன்றி கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சில மதத்தவரும் எதிர்த்தார்கள். முஸ்லிம்கள் எதிர்த்ததற்கு காரணம், இனிமேல் இஸ்லாத்திற்கு யாரும் வரமட்டார்களோ என்பதற்காக அல்ல. அந்த கருப்புச் சட்டத்தில் இடம்பெற்ற சில ஷரத்துகள், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மத ரீதியான சில உரிமைகளை பறிக்கும் வகையில் இருந்தது. இதுதான் முஸ்லிம்கள் எதிர்ப்பிற்கு காரணம் என்பதை ராமகோபாலன் விளங்கிக் கொள்ளட்டும்.
இறுதியாக, காட்டாற்று வெள்ளத்தை கைகளால் தடுத்திட முடியாது; அதுபோன்று தான் இஸ்லாமிய வளர்ச்சியையும் எவரது புலம்பலும் தடுத்து நிறுத்தி விடாது. அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் தகர்த்து விட்டார்கள். இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்று அமெரிக்கா அதிபர்கள், அமெரிக்க மக்கள் மனதில் நஞ்சை விதைக்க நினைக்கையில், அதை உடைத்தெறிந்து இன்று இஸ்லாம் அமெரிக்காவில் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளில் வெகு வேகமாக பரவி வருகிறது. எனவே பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களோ, இந்தியாவில் உள்ள முஸ்லிம்களோ, வேறு எந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களோ கட்டாய மதமாற்றம் செய்யவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இஸ்லாம் மற்ற மதங்களை மட்டுமல்ல; மனிதனின் மனங்களையும் தாமாகவே வெல்லும் வலிமையுடையது என்று கூறிகொள்கிறோம்.