வியாழன், 13 செப்டம்பர், 2012

கூடங்குளம் அணுஉலை விவகாரம்: தமிழக மக்கள் அறியவேண்டிய உண்மைகள்!





                                   கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடும் மக்களையும், உதயகுமார் உள்ளிட்ட வழிநடத்தும் மக்கள் போராளிகளையும் தேசத்துரோகிகளாகவும், தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்தடைக்கு இவர்கள்தான் காரணம் எனவும், இவர்களை சுட்டுக் கொன்றுவிட்டால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் எனவும், அதன்பிறகு கூடங்குளத்தில் பணிகள் தொடங்கப்பட்டு தமிழகமே மின்வெட்டு இருளிலிருந்து மீண்டுவிடும் என்பதுபோலவும் ஒரு "மூட நம்பிக்கை' நிலவிக் கொண்டிருக்கிறது.

அனைவரும் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்வெட்டுக்கும், கூடங்குளம் போராட்டங்களுக்கு துளியும் தொடர்பு இல்லை. இது இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே சிறிதும் பெரிதுமாக நடைபெற்று வரும் ஒரு நெடிய போராட்டமாகும். கடந்த ஒரு வருடமாக இப்போராட்டம் மக்கள் எழுச்சிமிகு தொடர் போராட்டமாக மாறியிருக்கிறது. அதற்கு என்ன காரணம்?

வாழ்வுரிமை
கூடங்குளம் அணுஉலையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்குள் 35 ஆயிரம் மக்களும், 5 கி.மீ. சுற்றளவுக்குள் ஒரு லட்சம் மக்களும் வாழ்கிறார்கள். அம்மக்களின் வாழ்வுரிமைப் போராட்டம் என்பது தென்தமிழகம், கேரளா மற்றும் அண்டை நாடான இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பானது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் வசிக்கும் ஊருக்கு அருகில் அணுஉலை அமைக்கப்பட்டால், அதன் ஆபத்துகளை அறிந்தபிறகு அதை நாம் அனுமதிப்போமா? எதிர்ப்போமா? என்பதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்
.
ஜப்பானும் இந்தியாவும்
ஜப்பானில் கடந்த 11.03.2011 அன்று ஏற்பட்ட பூகம்பத்தில் "புகுஷிமா அணுஉலை' பாதிக்கப்பட்டு கதிர்வீச்சு பரவியது. அறிவியல் தொழில்நுட்பத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஜப்பானாலேயே இதைத் தடுக்க முடியவில்லை. சுமார் 20 ஆயிரம் ஜப்பானியர்கள் இறந்திருக்கலாம் என்றும், அதை ஜப்பானிய அரசு மறைப்பதாகவும் சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.

அணுஉலை கசிவை, விபத்தை ஜப்பான் போன்ற வளர்ந்த - வல்லமை மிக்க நாடுகளாலேயே தடுக்க முடியவில்லை எனில், இந்தியா போன்ற தேசங்களால் என்ன செய்ய முடியும்? தானே புயலால் ஏற்பட்ட சேதத்திற்கு முதலுதவி செய்யவே நமக்கு ஒரு வாரம் தேவைப்படுகிறது. அணுஉலை வெடித்தால், நமது அரசின் மீட்பு நிலை எப்படி இருக்கும் என்பதை மனசாட்சியோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

14000 கோடியா? உயிர்களா?
14000 கோடிகளை முதலீடு செய்து அணுஉலை கட்டிய பிறகு இப்போது அதை எதிர்ப்பது நியாயமா? என சிலர் கேட்கிறார்கள். இந்த அணுஉலை அமைக்கப்பட்ட 1980களில் இதுகுறித்த விழிப்புணர்வு யாருக்கும் இல்லை. நம் பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகப் போகிறது, நமக்கெல்லாம் வேலைகளும், சலுகைகளும் கிடைக்கப் போகிறது என அரசின் ஏமாற்று பிரச்சாரங்களை அம்மக்கள் நம்பியிருந்தனர்.
இதுகுறித்து உதயகுமார் உள்ளிட்ட பலர் அப்போது எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தபோது அதை அம்மக்கள் எதிர்த்தனர். 

ஜப்பான் - புகுஷிமா அணுஉலை விபத்துக்குப் பிறகே அப்பகுதி மக்கள் தங்களுக்கு நேரப்போகும் அபாயங்களை உணர்ந்தனர். அதன்பிறகே கடந்த ஒரு வருடமாக தொடர் போராட்டங்களை மக்கள் நடத்திவருகின்றனர். உதயகுமார், புஷ்பராயன், ஏசுராஜ் போன்ற வழிநடத்தும் போராளிகளே தடுத்தாலும், அம்மக்கள் போராட்டங்களை கைவிடப் போவதில்லை என்பதே உண்மை. 14000 கோடி ரூபாய் வீணாகிறதே... என கவலைப்படும் "நல்லவர்கள் - தேசபக்தர்கள்' ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் மகளுக்கு ஒரு மணமகனை நிச்சயம் செய்து, திருமணம் ஓராண்டுக்குப் பிறகு நடத்தப்படும் என முடிவெடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். 

திருமணம் நெருங்கும் தருணத்தில், மணமகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகத் தெரியவருகிறது. அப்போது நிச்சயத்தை காரணம் காட்டி திருமணத்தை நடத்துவீர்களா? அல்லது ரத்து செய்வீர்களா? இதற்கு நீங்கள் தரும் பதில்தான் கூடங்குளம் போராட்டக்காரர்களின் கேள்விகளுக்கும் பொருந்தும்.

அணுஉலை மூலம் அதிக மின்சாரம் கிடைக்குமா?
இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள மின் நிலையங்களில் நிலக்கரி, வாயு, எண்ணெய் போன்றவற்றை உள்ளடக்கிய அனல்மின் நிலையங்களிலிருந்து 65.10 சதவீதமும், புனல்மின் நிலையங்களிலிருந்து 21.22 சதவீதமும், சூரிய ஒளி, காற்றாலை போன்றவற்றிலிருந்து 11.05 சதவீதமும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதேசமயம், அணுஉலைகளி-ருந்து மொத்தமே 2.36 சதவீத மின்சாரத்தை மட்டுமே பெறப்படுகிறது.
கூடங்குளத்தில் அணுஉலை இயக்கப்பட்டால் மொத்தமாக 15 நிமிடங்களுக்குத் தேவையான மின்சாரம் மட்டுமே கிடைக்கும். இந்த உண்மைகளை மத்திய மாநில அரசுகள் மறைக்கின்றன.

மின்சார உற்பத்தியைப் பெருக்க அணுஉலைகளுக்கு பதிலாக கடல் அலை, நதிகள், அருவிகள், காற்றாலை, சூரிய ஒளி ஆகிய இயற்கை துறைகளிலிருந்தும் - தொழில்நுட்பங்களிலிருந்தும் தயாரிக்க முடியும். அதை அரசு ஏன் செய்ய மறுக்கிறது?

அறிவியல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்த நாடுகளான ஜெர்மனி போன்ற பல நாடுகள் கூடங்குளத்தில் இருப்பது போன்ற அணுஉலைகளை தங்கள் நாட்டில் அனுமதிப்பதில்லை. அமெரிக்காவும், ஜப்பானும் புதிதாக அணுஉலைகளை தங்கள் நாடுகளில் நிறுவ தடை விதித்துவிட்டன.

உலக யுரேனியத்தில் 23 சதவீதத்தை தன்னகத்தே வைத்திருக்கும் ஆஸ்திரேலியா, தனது நாட்டில் இதுவரை ஒரு அணுஉலையைக் கூட கட்டவில்லை.
 தற்போது ரஷ்யாவின் துணையோடு கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுஉலை என்பது வி.வி.ஐ.ஆர். வகையைச் சார்ந்ததாகும். இந்த வகை அணுஉலைகள் கடற்கரைப் பகுதிகளில் இதுவரை அமைக்கப்பட்டதில்லை. ரஷ்ய பொறியாளர்களுக்கு இதில் முன் அனுபவமும் இல்லை. அதைவிட கவனிக்கத்தக்கது, இந்த வகை அணுஉலைகளின் குளிர்விக்கும் கலன்கள் முதல்முறையாக கடல்நீரைக் கொண்டு பரிசோதிக்க இருக்கின்றன.
நாம் கேட்பது என்னவெனில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் என்ன, பரிசோதனை எலிகளா? உலகிலேயே இவர்கள்தான் ஊருக்கு இளைத்தவர்களா?
ஜப்பானில் புகுஷிமா அணுஉலை விபத்து நடந்தபிறகு, ரஷ்ய அணுஉலைகளின் தரத்தை ஆராய ஒரு குழுவை அமைத்தார் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ். அக்குழு, "சக்திவாய்ந்த புகுஷிமா ஜப்பானிய அணுஉலை விபத்துகளைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கான வலிமை ரஷ்ய அணுஉலைகளுக்கு இல்லை' என அறிக்கை சமர்ப்பித்து விட்டது.

ரஷ்யாவில் "செர்னோபிலில்' தான் 1986 ஜூன் மாதத்தில் கதிர்வீச்சு வெளியேறி 30 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.
இதில் 9 முதல் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்டது. இது ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளை விட நூறு மடங்கு ஆபத்துகளை ஏற்படுத்தியது.
ரஷ்யாவின் துணையோடு அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுஉலைகள், புயல், சுனாமி, பூகம்பம் ஏற்படும் வாய்ப்புள்ள புவிக்கோட்டில் அமைந்துள்ளதை நினைவில் கொள்ளவேண்டும்.

தேசத்துரோகிகள் யார்?
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணுஉலைகள் முதலில் கேரளாவில்தான் அமைக்க திட்டமிடப்பட்டன. கேரள அரசும், மக்களும் விழித்துக் கொண்டதால் அது தமிழகத்தின் தலையில் கட்டப்பட்டுள்ளது.
"அணுஉலைகளை எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம்' என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துவிட்டார்.
மலையாளிகளுக்கும், வங்காளிகளுக்கும் உள்ள சமூகப் பொறுப்புணர்வு தமிழர்களுக்கு இல்லையா? உதயகுமார் போன்றவர்கள் தேசத்துரோகிகள் என்றால் கேரள, மேற்குவங்க அரசியல் தலைவர்கள் எல்லாம் யார்?
அமெரிக்கா - ரஷ்யாவின் செல்லப் பிள்ளைகளான மன்மோகன் சிங்கும், மான்டேக் சிங் அலுவாலியாகவும் யார்? மக்களுக்காகப் போராடும் உண்மையான தலைவர்களை எதிர்கால வரலாறு விளக்கத்தான் போகிறது.
அனைவரும் மதிக்கும் அப்துல் கலாம், கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கிறாரே...? எனலாம்.
அப்துல் கலாம் ஒரு அரசாங்க பிரதிநிதி. அவர் ஒரு ஏவுகணை விஞ்ஞானி தானே தவிர அணு விஞ்ஞானி அல்ல. அவரை நாமும் மதிக்கிறோம். ஆனால் தினமும் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்களுக்காகவோ, தீண்டாமையால் அவதிப்படும் தலித்துகளுக்காகவோ, கலவரங்களால் பாதிக்கப்படும் சிறுபான்மையினர்களுக்காகவோ என்றைக்காவது ஐயா அப்துல் கலாம் குரல் கொடுத்திருக்கிறாரா? என்பதையும் கேள்விகளாக முன்வைக்கிறோம்.
காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை வரவேற்றவர்கள் கூட நேதாஜியின் நியாயங்களையும் ஏற்றார்கள் என்பதை "அறிவுஜீவிகள்' புரிந்துகொள்ள வேண்டும்.
அப்துல் கலாம் அவர்கள் இவ்விஷயத்தில் மக்களின் பக்கம் நிற்காமல் அரசு பக்கம் நிற்பது துரதிர்ஷ்டவசமானது, வருந்தத்தக்கது.

அணுமின் நிலையங்களின் உண்மை நிலை
இதுவரை இந்தியாவில் அமைக்கப்பட்ட அணுஉலைகள் எதுவும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை. அவற்றைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும்தான் செலவுகள் பன்மடங்காகின்றன.
இன்னும் பல புதிய அணுஉலைகளைக் கட்டினாலும், 2050ல் கூட அணுஉலைகளின் மூலம் 5 சதவீத மின்தேவையைக் கூட எட்ட முடியாது என்பதே உண்மை.
உண்மையில் அணுஉலைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறதா? அல்லது மின்சாரம் என்ற பெயரில் அணுகுண்டுகள் தயாரிக்கப்படுகிறதா? என்பதை அரசுதான் விளக்க வேண்டும்.

மக்களே... சிந்திப்பீர்...
அணுஉலைகளில் கசிவு என்பது தவிர்க்கவே முடியாததாகும். அவற்றின் கழிவுகளைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவ்வளவு எளிதல்ல. அது சேதமடைந்தால் அணுகுண்டுகளினால் ஏற்படும் பேராபத்தை விட மோசமாக இருக்கும்.
அப்பகுதிகளில் கடல்நீர் பாதிக்கப்பட்டு மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் அழியும். உணவு, குடிநீர், காற்று மாசுபடும். சுற்றுச்சூழல் கெடும். புற்றுநோய் பரவுவது தவிர்க்க முடியாதது என்றெல்லாம் உலக அனுபவங்கள் கூறுகின்றன. விஞ்ஞானிகளும் எச்சரிக்கிறார்கள்.
1984ல் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் "யூனியன் கார்பைட்' என்ற அமெரிக்க நிறுவனத்தில் விஷவாயு கசிந்ததில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததையும், இன்றுவரை அங்கு குழந்தைகள் ஊனமுற்றும், புற்றுநோயோடும் பிறப்பதையும் பார்க்கும் போது நெஞ்சம் வெடிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான இழப்பீடுகள் இல்லை. இந்திய அரசு நம் மக்களை மறந்துவிட்டு, அமெரிக்க கம்பெனிக்கு ஆதரவாக இன்றுவரை செயல்படுவதைப் பார்த்தபிறகும், நீங்கள் கூடங்குளம் போராட்டத்தை எதிர்த்தால் அது உங்கள் மனசாட்சியைக் கொல்வதாகவே இருக்கும்.
நமக்கு மின்சாரம் வேண்டும்! ஆனால் மக்களை அழித்து சுடுகாட்டில் விளக்குகள் எரியவேண்டாம்!

வெளியீடு
மனிதநேய மக்கள் கட்சி.